
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குளிர்காய்ச்சல், தொண்டைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனக்குறைவாக இருப்பவர்களுக்கு இது உயிராபத்தை ஏற்படுத்தவல்லது. சாதாரண காய்ச்சலையும் இவ்வகை காய்ச்சல் என நினைத்து பயப்படத்தேவையில்லை. ஆனாலும் அலட்சியமாகவும் இருக்க வேண்டாம்.
இவ்வகை வைரசுகளை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் (தமிஃபுளூ போன்றவை) பல இருந்தபோதும் இதை முன்கூட்டியே தடுக்கக்கூடிய தடுப்பு மருந்துகள் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இதை தடுத்துக் கொள்ளலாம்.
நோய் காணப்படுகின்ற நாடுகளில் வாழ்பவர்கள் வாய்,மூக்கு பகுதிகளை மூடிக்கொள்ளுதல்,குப்பைகள் சேராமல் சூழலை சுத்தமாக வைத்திருத்தல்,நோயினால் பாதிக்கப்பட்டவர் இருமல் வரும் போது வாயில் துணியை வைத்து மறைத்துக் கொள்ளுதல்,நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வருவர்கள் தங்கள் வாய், கண்,மூக்குப் பகுதிகளை கையினால் தொடாதிருத்தல்,கைகளை சோப்பு இட்டு நன்றாகக் கழுவிக் கொள்ளுதல், மக்கள் நெருக்கடியான இடங்களில் அதிக நேரம் இருக்கக் கூடாது. நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து இரண்டடி தொலைவுக்கு தள்ளி இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத்தக்க சத்தான உணவு, அதிகப்படியான திரவ உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளால் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வரும் குழந்தைகளை டெட்டால் சோப் போட்டு முகம், கை, கால்களை சுத்தமாக கழுவ சொல்லவும், அதன்பின்னரே சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ சொல்லவும். சக நண்பர்கள் காய்ச்சல் அல்லது சளி பிடித்திருந்தால் அவர்கள் கைக்குட்டையை வைத்து விளையாட வேண்டாம் என அறிவுறுத்தவும்.
இந்நோய் பலருக்கு சாதாரண ஃப்ளூ மருந்துகள் மூலமாகவே நன்கு குணமடைந்து விட்டனர். எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். அதே நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.